ஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் 13-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு
Dec 9 2019 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும், வரும் 13-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா பெண் மருத்துவரை, பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற குற்றவாளிகள், என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த, சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது, காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து குற்றவாளிகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது அவர்கள், சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், சைபராபாத் காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார் தெரிவித்தார்.
இதனிடையே, என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் இருவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நாளை மறுதினம் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், என்கவுண்டருக்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் 13-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.