பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றம் உறுதி செய்யப்பட்டால் 3 வாரங்களுக்குள் மரண தண்டனை : புதிய சட்டம் - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
Dec 10 2019 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், 3 வாரங்களுக்குள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், ஆந்திர சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம், தன்னை பெரிதும் பாதித்ததாக ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை 3 வாரங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம் ஆந்திர சட்டசபையில் இயற்றப்படும் என திரு. ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இது தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், பாலியல் வன்கொடுமை தொடர்பாக, மாநிலத்தின் எந்த காவல் நிலையத்திலும், புகார் பதிவு செய்ய, புதிய சட்டம் வழிவகுக்கும் என்று தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை கொலை வழக்குகளில், டி.என்.ஏ அறிக்கைகள் உள்ளிட்ட சான்றுகள் வலுவாக இருந்தால், குற்றம் நடைபெற்ற 3 வாரங்களுக்குள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகுக்கும் என்று கூறினார். இச்சட்டம், ஆந்திர சட்டசபையில் நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக திரு. ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டார்.