சேலம் ஆத்தூர் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன நேர்த்திக்கடன் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உமையப்பன் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதத்தையொட்டி தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவையொட்டி, சுவாமி ஊரணி பொங்கல் வைத்தும், தலையில் தேங்காய் உடைத்தும், பக்தர்கள் நூதன பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். இதையடுத்து, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்தும், சாட்டையால் அடித்தும் நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ராயன் திருக்கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்படி அய்யனார் ஆலயத்தில் மகா குடமுழுக்கு விழாவினையொட்டி, கடந்த 3 தினங்களாக யாகசாலை பூஜை நடைபெற்றன. இதன் நிறைவாக நேற்று புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஆலயத்தினை வலம் வந்து மூலஸ்தான விமானத்திற்கும், 63 அடி உயரமுடைய வால்முனீஸ்வரன் சுவாமிக்கும் மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள கணக்கன்பட்டி அக்கமார் ஈஸ்வரி திருக்கோயிலில், கடந்த 29-ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாக பூஜையில் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்ட கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புண்ணிய நதிகளின் தீர்த்தங்களைக் கொண்டு இன்று காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர்தெளித்து மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன், பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரையடுத்த பட்டினஞ்சேரியில் பழமையான சீராளம்மன் ஆலயத்தில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வளமாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், புதுச்சேரி வைத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோயில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர், கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சவாமி தரிசனம் செய்தனர்.