மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா மீது பேரன்பு கொண்ட பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் மக்களின் முதல்வருக்காக தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மக்களின் முதல்வர் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க வேண்டி, தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். மஞ்சள் மற்றும் செவ்வாடை அணிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் 5 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாகச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மக்களின் முதல்வர் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க வேண்டி, தேனி சாலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனையும், வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலில் சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், தியாகதுருகம் ஒன்றிய கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பொதுமக்களும் அ.இ.அ.தி.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தினர் முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். மூலவருக்கு சிறப்பு அர்ச்சனைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. தங்கத்தேர் புறப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவத்திபுரம் நகராட்சி பகுதியில் உள்ள, அருள்மிகு பாதாள விநாயகர் திருக்கோயிலில், 108 தேங்காய் உடைத்தும், விநாயகருக்கு பால், தயிர் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்தும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
வடசென்னை, தெற்குமாவட்ட அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலுள்ள தர்காவில் மலர்போர்வை அணிவித்து, சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
வடசென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதி அ.இஅ.தி.மு.க. சார்பில், திருவேற்காடு தேவிஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மக்களின் முதல்வருக்காக கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டி, சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.