கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன
Oct 31 2014 6:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வயலூரில் முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், தெய்வானை-முருகப்பெருமான் மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாங்கல்ய பூஜையைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, இரவில் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள வடவீதி சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.