கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம் - மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது
Nov 19 2021 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி, 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் திருக்கோவிலினுள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கு கொண்டு சென்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலையில், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக, திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபத்திருவிழாவில், மருத்துவம், காவல், தீயணைப்பு, சுகாதாரம் போன்ற உரிய பாதுகாப்புகளை அளித்து அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டுமென, பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும், மலை மீது ஏறவோ, கோயிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பக்தர்கள் பின்பற்ற அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.