தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற பால்குடம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jan 4 2024 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற பால்குடம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயத்தில், மார்கழி மாதத்தை முன்னிட்டும், ஆலய கும்பாபிஷேக நிறைவு நாளை யொட்டியும் ஆயிரத்து எட்டு கலசாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் பூஜைசெய்யப்பட்ட ஆயிரத்து எட்டு கலச தீர்த்தங்களால், காசி விஸ்வநாதருக்கும் காசி விசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி, கணபதி ஹோமம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியவாறு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகா தேவி அம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரேணுகாதேவி அம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவில் பூமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதையடுத்து மண்டல பூஜை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 19வது நாள் நிகழ்ச்சியில் அருள்மிகு மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் ஒரே சீருடையில் வள்ளி கும்மியாட்டம் ஆடியது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.