திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு
Mar 10 2017 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கபெருமான் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதனிடையே, திருத்தணி முருகன் கோயிலில், மாசிப்பெருவிழாவை முன்னிட்டு வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்களுடன் சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.