மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், மாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி சிவன் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு பால், தயிர்போன்றவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு 12 வகையான அபிஷேகங்களும், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயிலில், மாசி விழா மற்றும் 38-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோ பூஜை மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, பல்லக்கில் சாந்தாரம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள களியங்காடு சிவன் கோயிலில், மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
இதனிடையே, பிரசித்திபெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில், அப்பர் தெப்போற்சவ விழா, அம்மன் சன்னதி பொற்றாமரை குளத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமாள் பவனிவர, நெல்லையப்பர் கைலாச பர்வத வாகனத்திலும், காந்திமதி அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பருக்கு காட்சி கொடுத்தனர். இவ்விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடியில் உள்ள சிம்மம்மன் கோயிலில், தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜப்பெருமாள் ஆலயத்தில், மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.