தமிழகத்தில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை - தீபாராதனை : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு
Mar 14 2017 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மாசித்திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி, நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி திருக்கோயில் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். இன்று தெப்ப உற்சவத்துடன் மாசித்திருவிழா நிறைவடைகிறது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய திருவிழாவிற்காக பஞ்சபூதங்கள் நெல் கொண்டு வந்து சேர்க்கும் ஐதீக முறையில் வருடாந்திர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த புராதன ஐதீக திருவிழா நேற்று நடைபெற்றது. ஸ்ரீசுந்தரர்-பரவைநாச்சியார் சுவாமிகள் திருவாரூர் ஆழித் தேரோடும் வீதிகளில் வலம்வர, சுவாமியைத் தொடர்ந்து கொண்டையூரில் இருந்து பஞ்சபூதங்கள் போல் வேடம் புனைந்தவர்கள், நெல் மணிகளை நெல்கோட்டையில் வைத்து சுவாமியுடன் வலம் வந்து ஸ்ரீசுந்தரர் -பரவைநாச்சியார் ஆலயத்தை அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கும், நெல்மணிகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நெல்மணிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராதா திருக்கல்யாண மஹோத்ஸவம் பட்டாச்சார்யார்களால் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு மகா அபிஷேகம், ராதாகிருஷ்ண பட ஊர்வலுமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திவ்யநாம பஜனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ராதாகிருஷ்ணன் அருள் பெற்றனர்.
திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி அருள்மிகு திருமுருகநாதசாமி திருக்கோவில் மன நோய் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள மகாமக திருக்குலத்தில் மாசிமாத தெப்பத்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சகுந்தலவள்ளி தாயார் சமேத சந்திரசேகர் எழுந்தருளி, 9-முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்குளத்தில்நமச்சிவாயா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த தெப்பத்தேர் திருவிழாவில் ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு மழைவேண்டியும், உலக அமைதி வேண்டியும் அமிர்தவர்ஷினி ராகத்தில் நாதஸ்வரம் இசைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.