திருச்சியை அடுத்துள்ள திருவெள்ளறையில் அமைந்திருக்கும் பெருமாள் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற பங்குனி தேர்த்திருவிழா : ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்
Mar 24 2017 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியை அடுத்துள்ள திருவெள்ளறையில் அமைந்திருக்கும் பெருமாள் கோயிலில், பங்குனி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
108 திவ்ய தேசங்களின் ஒன்றான திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பெருமாள் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி இரவில் அனுமந்தவாகனம், கருட வாகனம், தங்க குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். 9ம் நாளான இன்று திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பெருமாள் பங்கஜவல்லி தாயாருடன் எழுந்தருளி சேவை சாதித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். திருத்தேர் கோயிலின் நான்கு வீதிகள் வழியாக வலம்வந்து நிலையை அடைந்தது.
இதேபோன்று, திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி தாயார் ஆலயத்தில் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்ப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சாய்ந்த கொண்டை அணிந்து கிளி மாலை, பதக்கம், திருவாபரணங்கள் சூடி, தாயார் தங்கப்பல்லக்கில் வீதி உலா வந்த பின்னர், ஆலய தீர்த்த குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பமானது 3 முறை வலம் வந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.