18 நாட்கள் நடைபெறும் தஞ்சை பெரியகோவில் சித்திரைத் திருவிழா தொடக்கம் - வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம்
Apr 21 2017 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மாண்ட கொடி மரத்திற்கு அதிகாலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவின் ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, மே 5-ம் தேதியன்று தேரோட்ட விழா நடைபெறவுள்ளது.
இதேபோன்று, கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் இராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் தங்க கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து, இராமானுஜர் சேஷவாகனத்தில் எதிர்சேவை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. இவ்விழாவில் திருக்கோவிலூர், சோளிங்கபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜமன்னார்குடி ஜீயர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.