தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Jun 13 2017 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற்றி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 9ம் தேதி காப்புக் கட்டுதலோடு தொடங்கியது. விழாவின் முகக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக புதிய தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்மிகு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி, என்ற பக்தி முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில் மேட்டுப்பாளையம், பிரம்மதேசம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி விழாவை முன்னிட்டு, பாலாக்குடியிலிருந்து சக்திகரகம் மற்றும் அலகு காவலடி புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இறுதிநாளான நேற்று 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள்பெற்றனர்.