தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Jun 14 2017 8:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற்றி பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே புதுவை நகரில் அமைந்துள்ள கோடி அற்புதம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 48வது ஆண்டுத் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவையொட்டி, நாள்தோறும் ஆலயத்தின் பங்குத்தந்தையர்களால் நவநாள் ஜெபங்களுடன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான நேற்று திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புனித அந்தோனியார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். வான வேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவனியை பங்குதந்தை பிரிட்டோ புனித நீர் தெளித்து தொடங்கி வைத்தார். சுண்டம்பட்டி, கந்திகுப்பம், புதுவை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்த இந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றைத் தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பாலவிநாயகர் திருக்கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாள் திருவிழாவான நேற்று சிறப்பு திருப்பலி மற்றும் நவநாள் திருப்பலி போன்றவை நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அந்தோனியார் ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர்.
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் தர்காவில், நாகூர் நாயகம் நேசப்பாறை சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.