தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
Jun 15 2017 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில், மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவிடச்சேரியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீகாசிவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதர் ஆலயத்தில், திருப்பணிகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. 4-ம் கால யாகசாலை பூஜைக்குப் பின்னர், மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, கோபுர விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள கருப்பண்ண சாமி கோயில் - கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வாகையூரில் உள்ள பொன்னியம்மன் அய்யனார் கோயில் - நாகை மாவட்டம் சாத்தனூரில் உள்ள சிவகாளியம்மன் கோயில் - ஐவநல்லூர் சொரிச்சமுத்துமாரியம்மன் கோயில் ஆகிய ஆலயங்களிலும் மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசம், கைக்கிளப்பட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சஞ்சீவிராய அஞ்சநேய ஸ்வாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் திருக்கோயிலில், வைகாசி விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து அக்னிசட்டி ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பக்தர்கள், அதனை, கோயிலுக்கு முன் சேர்த்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
நாகை அருகே வெளிப்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில், வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 30 அடி நீளமுள்ள செடிலில், நூற்றுக்கணக்கான பெற்றோர், தங்களது குழந்தைகளை ஏற்றி, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.