மீலாதுநபித் திருவிழா : தமிழகத்தின் பல்வேறு தர்காக்களில் கொண்டாடி மகிழ்ந்த இஸ்லாமியர்கள்
Dec 3 2017 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி, மீலாதுநபித் திருவிழாவை தமிழகத்தின் பல்வேறு தர்காக்களில் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகையும், அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள், இனிப்புகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மீலாடி நபியையொட்டி திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு ஆதிரெங்கம் பகுதியில் இஸ்லாமிய குழந்தைகள் பங்கேற்ற பேரணியும், மரக்கன்றுகள் நடும் விழாவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் பூவரசு, வேம்பு, மா, பலா, கொய்யா முதலான 50க்கும் மேற்பட்ட மர வகைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடவு செய்யப்பட்டன.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் மிலாடி நபி விழாவையொட்டி கொட்டும் மழையில் வந்த வாகனப் பேரணியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் புத்தாடை உடுத்தி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தகங்கள், இனிப்புகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதேபோல், வேலூரில் கோட்டை வெளி மைதானத்தில் இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு வந்து மிலாடி நபி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.