சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி
Jan 11 2018 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். போலீசாரின் கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி பிரசித்திப் பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மணிநேரம் வரிசையில் காத்துநின்று பக்தர்கள் அய்யப்பனை தரிசித்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளவும் ஏராளமான பக்தர்கள் எருமேலியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசியில் பேசிய நபர், 9 பேர் கொண்ட கும்பல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வெடிகுண்டுடன் புறப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சபரிமலையில் குண்டு வைத்து தாக்குதல் நடத்த உள்ளனர் என்றும் பேசிவிட்டு உடனே தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தானியங்கி பறக்கும் கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.