தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை நகரின் தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு உடலில் வர்ணங்கள் பூசியும், காளி, முருகன், கிருஷ்ணர், பச்சையம்மன் போன்ற வேடங்களை அணிந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நாகை மாவட்டம் செம்பனார் கோயிவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சந்தன அபிஷேகமும், சந்தன காப்பும் நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று மா விளக்கிட்டு வழிபாடு நடத்தினர்.
பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று உதிரச் சோறு பெற்று அம்மனை வழிபட்டனர்.
திருவள்ளூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளையில், ஏராளமானோர் கலந்து கொண்டு காட்டேரி உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதேபோன்று பெரிய பாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்திலுள்ள திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்துள்ள தண்டரை பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி, பக்தர்கள் வேல் குத்தியும், கடவுள் வேடமிட்டும் அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கும்பகோணம் அருகே தாராசுரம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி மகோத்சவ விழா மற்றும் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சீர்வரிசைப் புறப்பாடு மற்றும் அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் தீ மிதி வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசி உற்சவ திருவிழா, 20 நாள் பூ அலங்கார மண்டகப் படியுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் மலர்களால் விநாயகர், சிவன்பார்வதி, ஸ்ரீ வித்யா பார்வதி, திருவேற்காடு மாரியம்மன் உள்ளிட்ட அலங்காரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாளை பூச்சொரிதல் விழாவும், 20ம் தேதி கொடியேற்றமும் நடைபெறவுள்ளது.
திருவள்ளூரில் உள்ள பிரசித்திபெற்ற வீரராகவர் கோயிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் வைத்திய வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து எழுந்தருளினார். இதில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வலைய பட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திருக்கோயில் முன்பு வரிசையாக அமர்த்தப்பட்டு, தேங்காய் உடைக்கப்பட்டது.
முன்னதாக, பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.