தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Mar 30 2018 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி பனவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில், பங்குனி தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், விநாயகர் மற்றும் முருகன் வள்ளி - தெய்வாணையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தோரோட்டம் நடைபெற்றது. முன்னதாக முத்துகுமார சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.
திருச்சி மாநகரில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர விழாவையொட்டி, திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் கோ ரதத்தில் எழுந்தருளிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.