ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளில் சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகின்றனர்.
ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நேற்றுடன் நிறைவடைந்ததால், ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏழை எளியோருக்கு உதவி செய்து இஸ்லாமியர்கள் ஈகைப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், டெல்லி ஜிம்மா மசூதி, மும்பை மினாரா மசூதி, மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் விடிய விடிய விற்பனை களைகட்டியிருந்தது. ரம்ஜானுக்கான பொருட்கள், இனிப்புகள், ஆடைகளை வாங்க ஏராளமானோர் திரண்டதால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பாலஸ்தீனம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரமலான் பண்டிகை
தமிழகத்தில், ரம்ஜான் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மசூதி மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகைகளில், ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்று வருகின்றனர்.
ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மசூதியில் நடைபெற்ற தொழுகையில், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் திரு. ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனும், இஸ்லாமிய மக்களுக்கு, தொடர்ந்து அரணாக இருந்து வருவதாக திரு. ஷேக் தாவூத் தெரிவித்தார்.
சென்னை பெரியமேடு மசூதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டை மாநகராட்சி திடலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுரையில், தமுக்கம் மைதானம், மஹபுப்பாளையம், வில்லாபுரம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில், ஈதுல் பித்ரு எனப்படும் சிறப்பு திடல் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஏழை எளியோருக்கு பித்ரா எனும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஹாஜிமார் தெரு பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று, சையது முர்துஷா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நாகூர் தர்கா காதீரியா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறி ஆரத்தழுவிக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
திருச்சி அண்ணாநகர் திடல் மற்றும் ரோஷன் மஹாலில், பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு ரமலான் தொழுகை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இஸ்லாமியப் பெண்கள், தொழுகையில் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், இன்று காலை இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். இதேபோல், கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி, ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஜாமியா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மாண்புமிகு அம்மா, இஸ்லாமிய உலமாக்களின் நிலை அறிந்து, அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தொழுகை நடத்தப்பட்டது.
இதேபோன்று, கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், சிவகங்கை, காஞ்சிபுரம், அரியலூர், சேலம், ஆத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகைகள்
ரம்ஜானையொட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னரில் உள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கலந்து கொண்டார்.
இதேபோல், தீவுத்திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே, நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு இந்த நாளில் மேலும் பலப்படட்டும் என குறிப்பிட்டுள்ளார்.