கன்னியாகுமரியில் கோவிலின் பூட்டை உடைத்து நான்கு செம்பு சிலைகள் திருட்டு : சிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Jul 31 2018 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஸ்ரீகண்டேஸ்வரமுடையான் நயினார் கோவிலின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான நான்கு செம்பு சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடுக்கரை பகுதியில், நூறு ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த ஸ்ரீகண்டேஸ்வரமுடையான் நயினார் திருக்கோயில் உள்ளது. இந்நிலையில், கோயில் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், செம்பினால் ஆன நடராஜர் சிலை, முருகர் சிலை மற்றும் இரண்டு அம்பாள் சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கோயில் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பூதபாண்டி போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோயில்களை மையமாக வைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள கம்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஇளைய நாச்சியம்மன் கோவிலில் ஐம்பொன்னால் ஆன சாமிசிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள கோவில் சிலை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து, கம்பனூர் கிராம மக்கள், கோவிலில் உள்ள ஐம்பொன்னாலான சிலையின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்.