விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். தற்போது அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், தண்டையார்பேட்டையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்த சகோதரர்கள், விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில், ஏராளமான சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
திருப்பூர் மாநகர பகுதியில் இந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரத்து 500 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.
தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு வந்தன. இந்த சிலைகள் அனைத்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திரேஸ்புரம் கடலில் கரைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சண்முகநதி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி இருந்தது குறித்து சில இளைஞர்கள் கேள்வி எழுப்பியதால் வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பினரும் கல், உருட்டு கட்டை, காலி பாட்டில்கள் வீசி தாக்கிக் கொண்டனர். அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் தெள்ளாரில் உள்ள பெரிய ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பவானியில் உள்ள கூடுதுறையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் கீவளூர், செல்லுார், நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளஙல் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் புதிய கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு படகுகள் மூலம் ஆழ்கடலில் கரைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற பைபர் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக நம்பியார் நகர் மீனவர்கள் மற்றும் மீட்பு படையினர் படகு மற்றும் படகில் சென்றவர்களை மீட்டனர். இதனால், அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கபட்டிருந்த 128 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தலைகுந்தா பகுதியில் உள்ள காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால், தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
நெல்லையில் வைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதனையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவாரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.