தாமிரபரணி புஷ்கர திருவிழா : பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்
Oct 22 2018 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாமிரபரணி புஷ்கர திருவிழாவையொட்டி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். மஹா ஆரத்தி நடைபெற்றது.
தாமிரபரணி மகாபுஷ்கர விழாவின் 10-வது நாளான நேற்று, பாபநாசம், நெல்லை சந்திப்பு, குறுக்குத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் மடாதிபதிகள் நீராடி பூஜைகள் செய்து வழிபட்டனர். நேற்றிரவு தாமிரபரணி அன்னைக்கும், குறுக்குத்துறை ஆறு, பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கும் மஹா ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள சந்தனமாரியம்மன் கோலில் தசரா திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, 15 அம்மன் கோவில் சப்பரங்கள் வண்ன விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வந்தது. சப்பர பவணியை முன்னிட்டு 501 பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது.
ஷீரடி ஸ்ரீ சாய் பாபா சமாதியடைந்து நூற்றாண்டு விழாவையொட்டி, சாய்பாபாவின் பாதுகை மற்றும் 9 காசுகளை திருச்சிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக கொண்டு வந்தனர். மணிகண்டம் அருகில் மேக்குடி கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் பாதுகை, மற்றும் காசுகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே, தேவச்சகவுண்டன்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேடன் வேடச்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட காவிரி புனித நீரை கொண்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள புஷ்பகிரி கிராமத்தில் உள்ள தூய குழந்தை தெரஸா அன்னை ஆலயத்தின் தேர் பவனி நடைபெற்றது. அதையொட்டி மாபெரும் வாணவேடிக்கை நடைபெற்றது. அன்னையின் தேர் பவனியை முன்னிட்டு, ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.