பல்வேறு ஆலயங்களில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் பழைமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில், வைகாசித் திருவிழாவையொட்டி, தீமிதி திருவிழா நடைபெற்றது. திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் கரையில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக வந்த பக்தர்கள், கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
திருச்சி திருவெறும்பூரில் உள்ள செல்வமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழாவையொட்டி, பால்குட மற்றும் கரக உற்சவம் நடைபெற்றது. கருப்பண்ணசுவாமி ஆலயத்திலிருந்து அலகுகுத்தியும், தீச்சட்டி மற்றும் பால்குடம் சுமந்துவந்த பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்தின் எதிரில் இருந்த பூக்குழியில் பக்திபரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், நாம ஸங்கீர்த்தன பக்த ஜன சபா சார்பில் சீதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. மருதாநல்லூர் பூஜ்ய ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விருத்தாசலம் நெய்வேலி கம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சியில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார 18 கிராம மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டியும், மக்கள் நலனுக்காகவும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அம்மன் உருவம், விநாயகர் உருவம் மற்றும் கருப்பசாமி உருவ முளைப்பாரிகள் எடுத்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சீதையால் பிடிக்கபட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமர் வழிபட்டதால் உருவான வரலாற்றை சித்தரிக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. ராமர், சீதை, லெட்சுமணர் மற்றும் அனுமனுடன் திட்டகுடி நான்கு முனை சந்திப்புக்கு எழுந்தருளியதை தொடர்ந்து ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.