நவராத்திரி விழாவையொட்டி இல்லங்களில் கொலு பொம்மைகள் வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு ஆண்டுகளுக்கு மேலான பழமையான மற்றும் அழகான கொலு அமைத்து வருவதாக கீதா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அமைத்திருக்கும் கொலுவில் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம், இரண்டு இதிகாசங்கள், முத்தமிழ் என ஒன்று முதல் 10 வரை எண்கள் கொண்டு பொம்மைகளை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இளம் தலைமுறையினருக்கு கொலுவின் சிறப்பு குறித்து விளக்குவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரிலுள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைத்து பனியன் தயாரிப்பு நிறுவனங்களும் சுத்தபடுத்தபட்டு, வாசலில் கோலமிட்டு ரம்மியமாக காட்சியளித்தது. தொடர்ந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், உபகரணங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் அனைவருக்கும் பொரி, சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட அனைத்து தொலைக்காட்சி பத்திரிக்கை, செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. செய்தி சேகரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கேமிராக்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட உபகரணங்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியார்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயுத பூஜையையொட்டி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனைகள் மும்முரமாக நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை, பாரதிநகர், கீழக்கரை, பரமக்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று விழாக்கால சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கட்டைப் பையுடன் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
திண்டுக்கல்லில் பொது மக்கள் பூஜை செய்வதற்குரிய வாழைக்கன்று, பழங்கள், திருஷ்டி கழிக்க பூசணிக்காய், வெற்றிலைப்பாக்கு, உள்ளிட்டவைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். தொடர்ந்து சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கலையரசி தலைமையில், ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நகைப் பட்டறைகளில் தொழிலாளர்கள் ஆயுத பூஜையை வெகு சிறப்பாகக் கொண்டாடினர். நகைகள் வடிவமைக்கும் இயந்திரங்களை அலங்கரித்து, ஆரத்தி காண்பித்து தொழில் சிறக்க வேண்டினர்.