பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில், மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால், அவர் விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றுக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும், ஏ பிளஸ், ஏ, பி, சி ஆகிய நான்கு கிரேடுகளில், வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2019 அக்டோபர் மாதம் முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை, பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது. இதில், ஏ பிளஸ் கிரேடில், கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏ கிரேடில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ் குமார், முகமது ஷமி, புஜாரா, ராகுல் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். பி கிரேடில், மயாங்க் அகர்வால், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். சி பிரிவில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், தீபக் சாகர், ஸ்ரேயால் அய்யர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பி.சி.சி.ஐ.,யின் கிரேடு பட்டியலில் இடம்பெறவில்லை. இதன் மூலம், அவரது கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வருகிறது என்றுத் தெரிகிறது. மேலும், தனது ஓய்வு முடிவை தோனி விரைவில் அறிவிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.