விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கான லாரஸ் விருது : 2011 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் முக்கிய தருணமாக தேர்வு
Feb 18 2020 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் லாரஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் முக்கிய தருணமாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை லாரஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டின் சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா, ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டின் சிறந்த தருணங்கள் என்ற தலைப்பின்கீழ் வழங்கப்படும் விருதுக்கான தேர்வு பட்டியலில், இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 பேரில் சச்சின் ஒருவர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வாகை சூடியது. சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6-வது முயற்சியில் உலகக் கோப்பையை கைகளால் தழுவியதை சுமார் 135 கோடி ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர். இந்திய அணி வெற்றி பெற்றதும் சச்சினை சக அணி வீரர்கள் தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். சச்சினை வீரர்கள் தோளில் சுமந்து வந்த தருணத்தையே லாரஸ் அமைப்பு விருதுக்கான தேர்வு பட்டியலில் இணைத்துள்ளது. விருதுக்கு ஆன்லைனில் ரசிகர்கள் அளித்த வாக்கெடுப்பு மூலமாகவே இந்த விருதை சச்சின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஆர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி, 6 முறை பார்முலா-1 சாம்பியன் பட்டம் வென்ற லூயி ஹேமில்டனுக்கும் லாரஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.