ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டம் - 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது சென்னை
Oct 14 2020 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நடப்புத் தொடரில் முதன்முறையாக முதலில் விளையாடிய சென்னை அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரனும், டு பிளசிசும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய சாம் கரன், 31 ரன்களிலும், டு பிளசிஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய வாட்சன் - அம்பத்தி ராயுடு ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. வாட்சன் 42 ரன்களிலும், ராயுடு 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனி, 102 மீட்டர் அளவில் இமாலய சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஆகியோர் சுமாரான தொடக்கம் தந்தனர். வார்னர் 9 ரன்களிலும், பேர்ஸ்டோவ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். துபாயில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில், டெல்லி - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.