கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி அபார வெற்றி - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது
Oct 27 2020 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் முன்னேறியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில், சுப்மன் கில் 57 ரன்கள், மோர்கன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 149 ரன்கள் எடுத்தது.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் கேஎல் ராகுல் 25 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட் இழப்பிற்கு மந்தீப் சிங் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மந்தீப் சிங் 49 பந்தில் அரைசதம் அடிக்க, கிறிஸ் கெய்ல் 25 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்து, 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 18 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக, கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். துபாயில் இன்றிரவு 7 முப்பது மணிக்கு நடைபெறும் 47வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - டெல்லி அணிகள் மோத உள்ளன.