பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், பஞ்சாப்பை வென்றது ராஜஸ்தான் அணி : புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்
Oct 31 2020 10:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது.
பஞ்சாபிற்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற, கே.எல். ராகுலுடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில், 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய உத்தப்பா 30 ரன்னிலும், சாம்சன் 25 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 48 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில், ராஜஸ்தான் அணி 17 புள்ளி 3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 31 ரன்னும், பட்லர் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட ராஜஸ்தான் அணி, புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.
இதனிடையே துபாயில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில், டெல்லி அணி மும்பையை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.