ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 ரூபாய் பரிசுத்தொகை - பி.சி.சி.ஐ. அறிவிப்பு
Jan 19 2021 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த தொடரை வென்றது, மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருவர் ஹீரோ போல் விளையாடியதைக் காண முடிந்ததாகவும், சச்சின் டெண்டுல்கர் இந்திய வீரர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பி.சி.சி.ஐ. தலைவரான சவ்ரவ் கங்குலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆஸ்திரேலிய மண்ணில் இப்படி ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கும் எனவும், இந்த தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த நாளும், இந்த தொடரும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனவும், இந்திய அணியைக் கண்டு பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டீ வில்லியர்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய அணியின் ஆட்டம் பிரமிக்க வைப்பதாகவும், ரிஷப் பந்தின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த போட்டி மிகச் சிறந்த டெஸ்ட் போட்டி, எனவும், இந்திய அணியின் மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இதுவும் ஒன்று எனவும், குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ள இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அளிப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.