இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகல் - முடிவை மதிப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து
Jan 16 2022 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியின் முடிவை மதிப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருநாள், டி20 போட்டிகளை தொடர்ந்து, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை விராட் கோலி நேற்று அறிவித்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மோசமான விளையாட்டு குறித்து கடும் விமர்சனம் எழுந்த நிலையில், கோலியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விராட் கோலியின் விலகல் குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை அடைந்ததாக பெருமிதம் தெரிவித்தார். விராட் கோலியின் விலகல் முடிவு தனிப்பட்ட ஒன்று என்றும், அதனை பி.சி.சி.ஐ. பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியை வருங்காலத்தில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய நபராக விராட் கோலி இருந்திடுவார் என சுட்டிக்காட்டிய கங்குலி, அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.