அஃப்கனிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது : டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளின் எண்ணிக்கை 10-லிருந்து 12-ஆக உயர்வு
Jun 23 2017 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கனிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளின் எண்ணிக்கை 10-லிருந்து 12-ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1982 வரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகள் மட்டுமே டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்தன. அதே ஆண்டில் இலங்கைக்கும், 1992-ம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கும், கடைசியாக 2000-ம் ஆண்டில் பங்களாதேஷுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதனைத் தொடர்ந்து, அஃப்கனிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்காக காத்திருந்தன.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது. இதில், ஐ.சி.சி.யின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில்தான், அஃப்கனிஸ்தான் மற்றும் அயர்லாந்து நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு மற்ற அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அஃப்கனிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இதன்காரணமாக, இரு நாட்டு அணிகளுக்கும் சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் எண்ணிக்கையும் 10-லிருந்து 12-ஆக உயர்ந்துள்ளது.
ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.