முதல்முறையாக TNPL கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்று சேப்பாக்கம் அணி அசத்தல் - இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த தூத்துக்குடி அணியை வீழ்த்தி அபாரம்
Aug 21 2017 7:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
TNPL கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த தூத்துக்குடி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, சேப்பாக்கம் அணிசாம்பியன் பட்டம் வென்றது.
TNPL எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய தூத்துக்குடி அணி, சேப்பாக்கம் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி, சேப்பாக்கம் வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால், தூத்துக்குடி அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபினவ் முகுந்த் 41 ரன்கள் எடுத்தார்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக்கம் அணிக்கு, கோபிநாத் அதிரடி தொடக்கம் அளித்தார். ஒருமுனையில் தலைவன் சற்குணமும், கார்த்திக்கும் தலா 16 ரன்களிலும், ஆண்டனி தாஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிய கோபிநாத், அரை சதம் விளாசினார். இறுதியில், கேப்டன் சதீஷ் மற்றும் சரவணனின் அதிரடி ஆட்டத்தால், சேப்பாக்கம் அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம், முதல் முறையாக TNPL சாம்பியன் பட்டத்தை வென்று சேப்பாக்கம் அணி முத்திரைப் பதித்தது. 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட சேப்பாக்கம் அணியின் சரவணன் ஆட்டநாயகானவும், தூத்துக்குடியின் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.