பாகிஸ்தானில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Oct 29 2017 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதால், அந்நாட்டில் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால், எந்தவொரு நாடும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக, கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை கிரிக்கெட் அணியினர், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தபோது, லாகூர் நகரில் பயங்கரவாதிகள், இலங்கை கிரிக்கெட் அணியினரின் வாகனத்தை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் சுட்டும் கையெறிகுண்டுகளை வீசியும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோர் காயத்துடன் உயிர்தப்பினர். எனினும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 6 பாகிஸ்தான் போலீசாரும், பொதுமக்களில் இருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், லாகூர் நகரில் இன்று, 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் இலங்கை அணியும் விளையாடவிருக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டதை அடுத்து இப்போட்டி நடைபெறவிருக்கிறது. இப்போட்டியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கும் விளையாட்டரங்கினைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், அந்த பகுதியில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் நாளை வரை மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.