உலக ஹாக்கி லீக் காலிறுதி போட்டி - பெல்ஜியத்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Dec 7 2017 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக ஹாக்கி லீக் காலிறுதி போட்டியில், பெல்ஜியத்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. இதன் காலிறுதிப் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 31 நிமிடத்தில், இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோல் அடித்தார். அதன்பின் 35-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இதனையடுத்து, பெல்ஜியம் அணியின் லைபார்ட் லாயிக் 39-வது மற்றும் 46-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது.
பின்னர், 46-வது நிமிடத்தில் இந்தியாவின் ருபிந்தர் பால் சிங் ஒரு கோலும், 53-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கியூஸ்டர்ஸ் அமவுரி ஒரு கோலும் அடித்ததில், ஆட்டம் 3க்கு 3 என சமனில் முடிந்தது.
இந்நிலையில், நாக்-அவுட் சுற்று என்பதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.