ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Bancroft பந்தை சேதப்படுத்திய விவகாரம் - I.C.C. பாரபட்சத்துடன் செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு
Mar 26 2018 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், I.C.C. மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்நாட்டு அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் Bancroft, பந்தை சேதப்படுத்தியது அம்பலமானது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இதனை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டார். ஆனால் ஐ.சி.சி தரப்பில் ஸ்மித்தும், Bancroft-க்கும் சாதாரண தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட போதிலும் அபராதம், தரவரிசைப் புள்ளிகள் போன்ற சாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் நடுவரிடம் அதிக முறையீடு செய்ததாகக்கூறி, ஆதாரம் எதுவும் இல்லாமலேயே இந்திய வீரர்கள் 6 பேருக்கு தடை விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், 2008ம் ஆண்டு சிட்னி போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியினருடனான சர்ச்சையால் தனக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைவிட மிகப்பெரிய தவறு இழைத்திருக்கும் ஸ்மித், Bancroft ஆகியோருக்கு ஐ.சி.சி. உரிய தண்டனை அளிக்கவில்லை என்றும், ஆளுக்கொரு சட்டம் என்ற அடிப்படையில் அது செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.