காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியின் 77 கிலோ எடை பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம், ஆடவர் பளு தூக்குதல் போட்டியில், இந்திய வீரர் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை மீராபாய் சானு பெற்றுத்தந்தார். அவரும் பளு தூக்குதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற 53 கிலோ எடைப்பிரிவு மகளிர் பளு தூக்குதலில், இந்தியாவின் சஞ்சிதா சனு அதிக புள்ளிகள் குவித்து இந்தியாவுக்கு 2வது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து ஆடவர் பளு தூக்குதல் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் தீபக் லாத்தர் 3-ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், பளுதூக்கும் போட்டியின் 77 கிலோ எடை பிரிவில், தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு, Scotland-ன் Glascow நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், இதேபிரிவில் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் சதிஷ் குமார் சிவலிங்கம் வென்ற தங்கத்துடன் சேர்த்து, 3 தங்கம், ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி உட்பட 5 பதக்கங்களைப் பெற்று, பதக்கப்பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பெற்றோர் நெகிழ்ச்சி
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது, பளு தூக்குதலில் சதீஷ்குமார் சிவலிங்கம், தங்கப் பதக்கம் வென்றதற்காக, மறைந்த மாண்புமிகு அம்மா, பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கி உற்சாக மூட்டியதால் தான், ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்கும் பிரிவில் மீண்டும் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளதாக அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
ஆஸ்திரேலியாவில், கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், இன்று ஆடவருக்கான பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த திரு. சிவலிங்கம் - திருமதி. தெய்வானை தம்பதியரின் மகனான இவர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் பளு தூக்குதலில் தங்கப் பதக்கம் வென்றார். சதீஷ்குமார் சிவலிங்கம் மீண்டும் தங்கம் வென்றிருப்பது குறித்து, அவரது பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளு தூக்குதலில் தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு, அன்றைய முதலமைச்சர் மறைந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக வாழ்த்து தெரிவித்ததோடு, 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளித்து உற்சாகமூட்டினார் என்றும், அவர் அளித்த உற்சாகம் தான் சதீஷ்குமார் சிவலிங்கம் மீண்டும் தங்கப் பதக்கம் வெல்ல தூண்டுகோலாக அமைந்தது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சதீஷ்குமார் சிவலிங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சத்துவாச்சாரியில், அரசு சார்பில், இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவில் பளு தூக்கும் வீரர்கள் பயிற்சி மையம் கட்டடம் கட்டுவதற்கு, மாண்புமிகு அம்மா உத்தரவிட்டு, அதன்படி, கட்டடம் ஏறக்குறைய கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை திறந்து வைக்க எடப்பாடி அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் சதீஷ்குமார் சிவலிங்கத்தின் பெற்றோர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.