இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவிப்பு : சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
Aug 2 2018 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலஸ்டைர் குக் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். ஜோ ரூட் 43 ரன்களைத் தொட்டபோது, டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.
அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்க்ஸ், முகமது ஷமி வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மாலன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பய்ர்ஸ்டோ - ஜோ ரூட் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஜோ ரூட் 80 ரன்களில் விராட் கோலியிடம் ரன் அவுட் ஆக, பய்ர்ஸ்டோ, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியில், கரன் 24 ரன்களுடனும், ஆண்டர்சன் ரன் ஏதும் அடிக்காமலும் களத்தில் உள்ளனர். சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 4 விக்கெட்டுக்களையும், ஷமி 2 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.