தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Oct 6 2019 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில், 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.
இதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, டீன் எல்கர், குயின்டன் டி கார் ஆகியோரின் ஆட்டத்தால், 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், 7 விக்கெட் எடுத்து அஸ்வின் சாதனை படைத்தார். 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால், 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து மீண்டும் டிக்ளேர் செய்தது.
395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள், இந்திய அணி பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல், 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில், ஷமி 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.