அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்து, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது - புதிய சர்ச்சையை கிளப்பிய ட்விட்டர் நிறுவனம்
May 27 2020 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்து, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது என முதன் முறையாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாது என 60 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வாக்குச் சாவடிக்குச் செல்லாமலேயே வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சீட்டை மின் அஞ்சல் வழியாக அனுப்புவது உள்ளிட்ட சில நடைமுறைகளைப் பின்பற்ற அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் முடிவெடுத்துள்ளன. இதில் வாக்குச் சீட்டை மின் அஞ்சல் வழியாக அனுப்புவதில் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கும் என்றும், மீண்டும் தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், மின் அஞ்சலில் வாக்குச் சீட்டை அனுப்புவது தொடர்பான, டொனால்ட் ட்ரம்பின் பதிவு குறித்த உண்மைகளைக் கண்டறியுமாறு ட்விட்டர் நிறுவனம் தமது பதிவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இது போல், அமெரிக்க அதிபரின் பதிவு குறித்த சந்தேகத்தை ட்விட்டர் நிறுவனம் எழுப்புவது முதன் முறையாக நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ட்ரம்ப், மற்றொரு பதிவில், ட்விட்டர் நிறுவனம் தனது உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்றும், இது போன்ற செயல்களைத் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.