மியான்மரில் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நலக் குறைவு : விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்டபோது பரபரப்பு
Sep 14 2021 6:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. இதில் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு, விசாரணை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஆங் சான் சூகி, தான் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து காரில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர். நீதிபதிகள் அதை ஏற்று வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.