ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிப்பு - ஊரடங்கில் தளர்வு அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாக பிரதமர் அறிவிப்பு
Nov 29 2021 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினத்தில் இருந்து, ஊரடங்கில் தளர்வு அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிட்னி திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, 9 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து திரும்பிய பயணிகள், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், வரும் 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஆஸ்திரேலியா வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாட்டின் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், இந்த முடிவு மறு பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் ஸ்கார் மோரிசன் அறிவித்துள்ளார். இது குறித்து, தேசிய பாதுகாப்பு குழு இன்று கூடி ஆலோசிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.