ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் பாராட்டு
May 22 2022 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இந்தியாவும் மலிவு விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியாமல், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதால் தான், விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்திருக்கிறது என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தமது அரசும் இதே போன்ற பாதையில் பயணித்த போது, எதிர்க்கட்சியினர் தமது அரசை அகற்றி, நாட்டுக்குத் துரோகம் செய்துவிட்டனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.