உக்ரைனுக்கு சொந்தமான மேலும் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு - மக்கள் வாக்கெடுப்பை தொடர்ந்து அதிபர் விளாடிமர் புதின் அறிவிப்பு
Oct 1 2022 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான மேலும் 4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டார்.
உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பெற்ற க்ரைமியாவை கடந்த 2014ம் ஆண்டு ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தன்னகப்படுத்திய ரஷ்யா, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடுத்தது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள், அப்பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்கவேண்டும் என வலியுறுத்திவந்தனர். ஆனால் உக்ரைன் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா, பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள நான்கு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தியது. இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், போலியானது என்றும் உக்ரைன் மற்றும் மேற்கு உலக நாடுகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அந்த நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதாக அதிபர் புதின் அறிவித்தார். இதற்கான உத்தரவில் கையொப்பமிடும் நிகழ்ச்சி தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய புதின், மக்களின் விருப்பத்திற்கு இணங்கியே இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், புதினின் இந்த அறிவிப்புக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.