அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடும் பனிப்பொழிவு... பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Nov 23 2022 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிலவும் வரலாறு காணாத பனிப்பொழிவால், அந்நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனியால், நியூயார்க் மக்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை தாக்கிய பனிப்புயல் எதிரொலியாக அந்நகரமே பனிக்குவியலில் மூழ்கி இருக்கிறது. நியூயார்க்கை கடந்த 19ம் தேதி தாக்கிய பனிப்புயலால், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது.
இங்குள்ள ஹேரி நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 180 சென்டி மீட்டர் பனி கொட்டியுள்ளது. நியூயார்க்கின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், வீடுகளில், பல அடி உயரத்துக்கு உறைபனி சூழ்ந்துள்ளது. ஹம்பர்க் நகரத்தில் 6 அடிக்கு மேல் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
உறைய வைக்கும் கடும் குளிர் எதிரொலியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். சாலைகள், வீடுகள், வாகனங்கள் என திரும்பிய திசையெங்கும் வெள்ளை கம்பளம் போத்தியது போன்று காட்சியளிக்கின்றன. பல இடங்களில், பனிப்போர்வை மூடி இருக்கும் டிரோன் காட்சிகள் வெளிகாகியுள்ளன.
பனிப்பொழிவு இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதால் நியூயார்க் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் டன் கணக்கில் கொட்டி கிடக்கும் பனி குவியலை அகற்றும் பணியை நியூயார்க் மாகாண நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.