தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் : அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Oct 6 2017 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால், பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதத்தை ஒழிக்கும் விவகாரத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின், தெற்கு ஆசியா மற்றும் அஃப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இனியும் புகலிடம் அளித்தால், அதை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் பாரபட்சமின்றி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குழுவில் தெற்காசிய மற்றும் அஃப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், பாகிஸ்தான் வழிக்கு வரவில்லை என்றால் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாமல், பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தயாராக இருக்கிறார் என்றும் மேட்டிஸ் தெரிவித்தார். மேலும், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தவறினால், அந்நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் எனவும் மேட்டீஸ் எச்சரித்தார்.