மியான்மரில், ஒரு மாத கால போர் நிறுத்தம், இன்றுடன் முடிவுக்கு வருவதாக, ரோஹிங்கியா விடுதலைப் படையினர் அறிவிப்பு : ரோஹிங்கியா அகதிகளுக்கு அளித்து வரும் உதவிகள் தொடரும் என பங்களாதேஷ் தகவல்
Oct 9 2017 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில், ரோஹிங்கியா விடுதலைப் படையினர் அறிவித்திருந்த ஒரு மாத கால போர் நிறுத்தம், இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மியான்மரில், ரோஹிங்கியா விடுதலைப் படையினர், கடந்த ஆகஸ்ட் மாதம், அந்நாட்டு ராணுவ முகாம் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் நிகழ்த்தினர். இந்தத் தாக்குதலில், 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ரோஹிங்கியாக்கள் வசிக்கும் கிராமங்களில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியதில், சுமார் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக, மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கடந்த 6 வாரங்களில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள், மியான்மரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி, அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு மாத கால போர் நிறுத்தம், இன்றுடன் முடிவுக்கு வருவதாக, ரோஹிங்கியா விடுதலைப் படையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, ரோஹிங்கியா அகதிகளுக்கு அளித்து வரும் உதவிகள் தொடரும் எனத் தெரிவித்துள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவுவதற்காக, சர்வதேச நாடுகள் அளித்து வரும் நிதியுதவி பாராட்டத்தக்கது என்றார்.