பாகிஸ்தானில் பதுங்கியுள்ள சர்வதேச தீவிரவாதி ஹஃபீஸ் சையத்தின் உயிருக்கு அமெரிக்காவிடமிருந்து ஆபத்து : லஷ்கர-இ-தொய்பா சிறப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு
Dec 23 2017 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள சர்வதேச தீவிரவாதி ஹஃபீஸ் சையத்தின் உயிருக்கு, அமெரிக்காவிடமிருந்து ஆபத்து நேரிடலாம் என்பதால், அவருக்கு லஷ்கர-இ-தொய்பா சிறப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவரும், சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டவருமான ஹஃபீஸ் சையத், பாகிஸ்தான் லாகூரில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் அவரை, அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து, அவர் தற்போது பாகிஸ்தானின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அண்மையில், ஜெருசலத்தை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை அவர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்து வருகிறார்.
இந்நிலையில், ஹஃபீஸ் சையத்தின் உயிருக்கு அமெரிக்காவால் ஆபத்து ஏற்படும் என்று தகவல் வெளியானதை அடுத்து, அவருக்கு லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு படையினர், அதிநவீன ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 24 மணிநேரமும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஹஃபீஸ் சையத்தை கைது செய்து ஒப்படைத்தால், 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.