சவுதி அரேபியா பத்திரிகையாளர் துருக்கியில் கொல்லப்பட்டதாக சவுதி நிர்வாகம் அறிவிப்பு - சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
Oct 20 2018 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் கொல்லப்பட்டதாக சவுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சி பற்றி கடுமையாக விமர்சித்துவந்த ஜமால் கஷோகி, கடந்த 2ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றவர், அதன்பின்னர் மாயமானார். தூதரகத்தில் வைத்து அவரை சவுதி அரேபிய ஏஜெண்ட்டுகள் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது. கஷோகி மாயமானது குறித்து மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று துருக்கி போலீஸ் அதிகாரிகள், இஸ்தான்புல் துணை தூதகரத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, கஷோகியை, சவுதி அரேபியா கொலை செய்திருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், இஸ்தான்புல் துணை தூதரகத்தில் கஷோகி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை தூதரகத்தில் கஷோகிக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதில் அவர் கொல்லப்பட்டதாக சவுதி அரேபியா அரசு வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற வருவதாகவும், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பிரச்சனை தொடர்பாக அரசு உயரதிகாரிகள் இருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, அரிசோனா மாகாணம் லூக் விமான படைதளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எந்த சூழ்நிலையில் கஷோகி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா சொல்லியிருப்பது நம்பத்தகுந்ததாக உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் நல்லதொரு முதல் நடவடிக்கையை சவுதி அரேபியா எடுத்தள்ளது என்றும் குறிப்பிட்டார்.